ஞாயிறு, 30 நவம்பர், 2008

கவனிக்குமா மின்சார வாரியம்?

பரங்கிப்பேட்டை கிதர்சா மரைக்காயர் தெருவும், பெரிய ஆசராகாணா தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள மின் கம்பத்தினை தான் படத்தில் காண்கிறீர்கள். சிறுவர்-சிறுமியர் விளையாடும் இந்த இடத்தில் ஒயர் வெளியேயும், பெட்டிகளுக்கு பூட்டு இன்றியும் காட்சியளிப்பது ஆபத்தாகவே இருக்கின்றது. சமீபத்திய மழை வெள்ளத்தின் போது விரைவாக செயல்பட்டு மின்சாரத்தை வழங்கி அனைவர்களின் பாராட்டையும் பெற்ற பரங்கிப்பேட்டை மின்சார வாரியம் இது விஷயத்திலும் தனது கவனத்தினை செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. கவனிக்குமா மின்சார வாரியம்?, பொறுத்திருந்து பார்ப்போம்.....

மீராப்பள்ளி குளத்திலே...

"ஹே" வென்ற உற்சாக குரல்களால் இன்று மீராப்பள்ளி குளம் களை கட்டியது. ஒரு வார கால தொடர் மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது, மழையின் காரணமாக மீராப்பள்ளி குளம் நிரம்பி வழிவதாலும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்கள் தொடங்க இருப்பதாலும் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகமான கூட்டத்தினை பார்க்க முடிந்தது.