செவ்வாய், 2 டிசம்பர், 2008

வராலு மீன்

மாப்ளே... உடாதே.....நல்லா புடி..... வழுக்குதுடா.... இப்படியான உற்சாக குரல்கள் ஒலிக்க கையில் எமர்ஜென்ஸி லைட்டுடன் கூடியிருந்த இளைஞர்கள் கூட்டத்தால் சின்னக்கடை பகுதி நேற்றிரவு பத்து மணிக்கு களை கட்டியிருந்தது, எல்லாம் மீராப்பள்ளி குளத்திலிருந்து வெளிவரும் தண்ணீரில்
இரவு நேரத்தில் மட்டும் வெளியாகும் வராலு மீனை பிடிக்க தான். பாம்பை போன்று வளைந்து நெளிந்து போக்கு காட்டி அங்குமிங்கும் ஓடி நன்றாகவே அலைகழித்தது, பொறுத்து, பொறுத்து பார்த்த இளைஞர் ஒருவர் ஒரு கட்டத்தில் சாய்ந்தார் ரோட்டில் நெடிய மரம் போன்று, அகப்பட்டது வராலு மீன். அடுத்த வேட்டை தொடங்கியது, இந்த முறை இன்னுமொரு எமர்ஜென்ஸி லைட், கூடுதலாக சில சாக்கு, தண்ணீர் ஓட்டத்தில் தப்பாமல் இருக்க மணல் மூட்டை, சில குச்சிகளுடன் தொடங்கிய இவ்வேட்டையில் சில நிமிடங்களில் அகப்பட்டது பெரிய வராலு மீன். மீண்டும் தொடர்ந்தது வேட்டை, தூக்கம் கண்ணை தழுவவே நாம் விட்டோம் ஜூட்.

ஒரு விளக்கம்

குடம், குடமாய் தண்ணீர் என்ற தலைப்பில் பரங்கிப்பேட்டை வெள்ள நிலவரம் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் "மின்சார இல்லாத காரணத்தால் செல்போன் பேட்டரி ரீசார்ஜ் செய்ய ரூ பத்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது" என்ற தகவலை குறிப்பிட்டிருந்தோம். இது நமக்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே எழுதப்பட்டது என்பதினை தெரிவிக்கும் அதே நேரத்தில், "பரங்கிப்பேட்டை செய்தி மடலுக்கு" எந்த ஒரு நிறுவனத்தின் நற்பெயரையும் குலைக்கும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதினையும் தெரிவித்து கொள்கின்றோம்.

ஆசிரியர்